Monday 3 December 2012

மதுரை

பாண்டியர் குதிரைக்
குளம்படியும் - தூள்
பறக்கும் இளைஞர்
சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர்
சொல்லடியும் - இளம்
தோகைமார்தம்
மெல்லடியும்
மயங்கி ஒலித்த
மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப்
பூமதுரை

நீண்டு கிடக்கும் வீதிகளும்
- வான்
நிமிர்ந்து முட்டும்
கோபுரமும்
ஆண்ட பரம்பரைச்
சின்னங்களும் - தமிழ்
அழுந்தப் பதிந்த
சுவடுகளும்
காணக் கிடைக்கும்
பழமதுரை - தன்
கட்டுக் கோப்பால்
இளமதுரை

மல்லிகை மௌவல்
அரவிந்தம் - வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம்
குருக்கத்தி - இவை
கொள்ளை அடித்த
வையைநதி
நாளும் ஓடிய நதிமதுரை -
நீர்
நாட்டிய மாடிய பதிமதுரை

தென்னவன்
நீதி பிழைத்ததனால் - அது
தெரிந்து மரணம்
அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால்
- அவள்
கந்தக முலையில்
எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய
தொன்மதுரை - இன்று
ஜாதிக் கஞ்சும்
தென்மதுரை

தமிழைக் குடித்த
கடலோடு - நான்
தழுவேன்
என்றே சபதமிட்டே
அமிர்தம் பரப்பும்
வையைநதி - நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய
மாமதுரை - இது
மரபுகள்
மாறா வேல்மதுரை

மதுரை தாமரைப்
பூவென்றும் - அதன்
மலர்ந்த
இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள்
- அவை
எம்குடி மக்கள்
திரளென்றும் - பரி
பாடல் பாடிய
பால்மதுரை - வட
மதுரா புரியினும்
மேல்மதுரை

மீசை வளர்த்த
பாண்டியரும் - பின்
களப்பிரர் பல்லவர்
சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த அந்நியரும்
- அந்த
அந்நியரில்சில
கண்ணியரும்
ஆட்சிபுரிந்த
தென்மதுரை -
மீனாட்சியினால்
இது பெண்மதுரை

மண்ணைத் திருட
வந்தவரைத் - தம்
வயிற்றுப்
பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட
வந்தவரை - ஊர்
பொசுக்கிக் போக
வந்தவரை - தன்
சேயாய் மாற்றிய
தாய்மதுரை - அவர்
தாயாய் வணங்கிய
தூய்மதுரை

அரபுநாட்டுச்
சுண்ணாம்பில் - கரும்பு
அரைத்துப் பிழிந்த
சாறர்ற்றி
மரபுக்கவிதை படைத்தல்போல்
- ஒரு
மண்டபம்
திருமலை கட்டியதால்
கண்கள் மயங்கும்
கலைமதுரை - இது
கவிதைத் தமிழின்
தலைமதுரை

வையைக் கரையின்
சோலைகளும் - அங்கு
வரிக்குயில் பாடிய
பாடல்களும்
மெய்யைச் சொல்லிய
புலவர்களும் - தம்
மேனி கறுத்த மறவர்களும்
மிச்சமிருக்கும்
தொன்மதுரை - தமிழ்
மெச்சி முடிக்கும்
தென்மதுரை

போட்டி வளர்க்கும்
மன்றங்களும் - எழும்
பூசை மணிகளின்
ஓசைகளும் - இசை
நீட்டி முழங்கும்
பேச்சொலியும் - நெஞ்சை
நிறுத்திப் போகும்
வளையொலியும்
தொடர்ந்து கேட்கும்
எழில்மதுரை - கண்
தர்ங்காதிருக்கும்
தொழில்மதுரை

ஆலைகள் தொழில்கள்
புதுக்காமல் - வெறும்
அரசியல் திரைப்படம்
பெருக்கியதில்
வேலைகள் இல்லாத்
திருக்கூட்டம் - தினம்
வெட்டிப்பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள்
சூழ்மதுரை - இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை

நெஞ்சு வறண்டு போனதனால்
வையை
நேர்கோடாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர் -
நதியைப்
பட்டாப் போட்டுக்
கொண்டதனால்
முகத்தை இழந்த
முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும்
பதிமதுரை
  
     -கவிஞர்.வைரமுத்து

No comments:

Post a Comment