Friday 11 May 2012

உன்னைக் காதலிப்பவர்களில் ஒருவன்

அந்தி மயங்கும் வேளையிலே தரணி ஆள வந்தவளே!

உலகத்தை இருட்டாக்கி நீமட்டும் ஒளிர்வதென்ன?

தோழியரின் புடைசூழ நீ வரும்போதெல்லாம்
என் முற்றத்தில் விழிவைத்துக் காத்திருப்பேன்;

என்னை காணும்போது உன் கன்னங்கள் சிவப்பதேனோ?
கருநீலப் புடவை உடுத்தியவளே!
பாலின் வெண்ணிறம் கொண்டவளே!
உன்னை காணும்போதெல்லாம் என் கண்கள் குளிருவதேனோ?
கண்கள் மட்டுமா குளிரந்தன?
இல்லை இல்லை என் மனமுமல்லவா குளிர்ந்தது!

நீ தேய்ந்தாலும் வளர்ந்தாலும் குணத்தில் தேய்வதில்லை;
அதனால் நானும் உன்னை வெறுப்பதில்லை;

நீ மழுதாய் காட்சிதரும் நாளே
எனக்கு சொர்க்கம்!
நீ முழுதாய் மறையும் நாளோ...!

உன்னை அடையப்போகும் நாள் எந்நாளோ?
அந்நாளை ஆவலுடன் எதிர்நோக்கும்,
உன்னை காதலிக்கும் கோடிக்கணக்கானவர்களில் ஒருவன்;
என்னை மட்டுமே நீ காதலிப்பாய் என நம்பும் ஒருவன்.


No comments:

Post a Comment